நெல்லையில் உள்கட்சி மோதல் துவக்கம்: தொகுதி மாறி பிரச்சாரம் செய்யும் அதிமுக நிர்வாகிகள்
நெல்லை: அதிமுக நிர்வாகிகள் தொகுதி மாறி பிரச்சாரம் செய்வதாக பாளையங்கோட்டை வேட்பாளர் புலம்பி வருகிறார். இதனால் கூட்டணி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடந்த 9ம் தேதி அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு அன்றே பிரச்சாரமும் துவங்கப்பட்டது. பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேனுக்கு உள்ளூர் நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
9ம் தேதி பிரச்சாரம் துவங்கியபோது பாளை தொகுதியில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு சென்று விட்டதாக தமிழ் மகன் உசேன் குற்றம் சாட்டினார். பாளை தொகுதி வேட்பாளர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை அழைத்து மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன் ஆலோசனை வழங்கினார்.
அப்போது தமிழ்மகன் உசேன் பேசியதாவது,
நான் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. 62 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவன். நான் சென்னையில் வசித்தாலும் எனது சொந்த மாவட்டம் நெல்லை தான்.
பாளையங்கோட்டை தொகுதியில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன் என்றால் இங்கு முதல்வர் ஜெயலலிதா நிற்பதாக தான் அர்த்தம். ஆனால் இங்குள்ள கட்சி
நிர்வாகிகள் முகத்தை பார்க்கும் போது சற்று வேறுபாடாக காட்சியளிக்கிறது.
இந்த தொகுதியில் உள்ள பலர் என்னுடன் பிரச்சாரத்துக்கு வராமல் நெல்லை தொகுதி நயினார் நாகேந்திரனுடன் சென்றுவிட்டனர். நான் வேட்பாளர் மட்டுமல்ல தலைமை கழக நிர்வாகியும் கூட. இங்கு என்ன நடக்கிறது என கட்சி தலைமை என்னிடம் அடிக்கடி போனில் கேட்கின்றனர். ஆனாலும் நான் சக தோழ நிர்வாகிகளை காட்டிக் கொடுக்கவில்லை என்றார்.