சென்னை சில்க்ஸ் தீ விபத்தை நேரில் பார்க்க யாரும் வராதீங்க... கலெக்டர் வேண்டுகோள்
தீ விபத்து ஏற்பட்டுள்ள தி.நகர் சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தீ விபத்து நிகழ்ந்த தி. நகர் சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
" சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம். அதிக கூட்டம் கூடுவது தீயணைப்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதிகாலை முதலே தீ பற்றி எரிவதால் புகைமூட்டம் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். தரைத்தளத்தில் தீவிபத்து நிகழ்ந்துள்ளதால் மேல் தளங்களுக்கும் தீ பரவியுள்ளது. கடையில் 7 வது தளத்தில் இருந்து இதுவரை 14 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் இல்லை.
சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்கவேண்டாம். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைய வேண்டாம். அனைவரின் வாகனங்களையும் சாலையில் நிறுத்தாமல் வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்துங்கள்.
தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டறிய முடியவில்லை. முதலில் தீயை அணைக்கும் பணியை முடித்துவிட்டு விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.