தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது! அக். 3 கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அறிவித்தார். தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், இதற்கான தேர்தல் அறிவிக்கை 26ம் தேதி அதாவது திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலும் 26ம் தேதியான இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பித்தது. தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ம் தேதி நடக்கும். வேட்புமனுக்களை அக்டோபர் 6ம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். 2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21ம் தேதி காலை 8.30 மணி முதல் எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு அக்டோபர் 26ல் நடைபெறும்.












Click it and Unblock the Notifications