இன்றுடன் ஓய்கிறது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே இறுதி நாளாகும். அத்தொகுதியில் வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க., பா.ம.க., த.மா.கா., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க.ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புறக்கணித்து விட்டன.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த 3 ஆம் தேதி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 13 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வருகிற 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 30 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.