வடகிழக்கு பருவமழை.. போன வருஷம் பெய்து கெடுத்தது.. இந்த ஆண்டு காய்ந்து கெடுக்கும் போல
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 68 சதவீதம் குறைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை சென்ற ஆண்டு கனமழையாக பெய்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இன்னும் சரியான அளவில் மழை பெய்யாமல் காய்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழைதான் தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரம். அந்த மழை கடந்த ஆண்டு அதிக அளவு பொழிந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டாவது பருவ மழை சரியான அளவில் பெய்து மக்களுக்கு நன்மை செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், பருவ மழை உரிய நேரத்தில் தொடங்கவில்லை. கால தாமதம் ஆனாலும் அக்டோபர் 30ம் தேதி மழை பெய்ய தொடங்கிவிட்டது. என்றாலும், 2 நாட்கள் மட்டுமே சற்று கனமான மழை தமிழகம் முழுவதும் பெய்தது. அதன் பிறகு, சரிவர பெய்யவில்லை. மாறாக பனி பெய்து குளிரத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் கனமழை பெய்யவில்லை என்றும் இதுபோல முன்பும் இருந்திருக்கிறது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.
மேலும், இதுவரை மழை பெய்த அளவின் படி 68 சதவீத மழை குறைவாகவே இந்த ஆண்டு பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் மழை மேகம் இருந்தும் ஈரப்பதம் இல்லை என்றும் அதனால் கனமழை பெய்யவில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அண்மையில் குறைந்தழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகி அது தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்தது. பின்னர் அது மியான்மர் வழியாக சென்றுவிட்டது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications