கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பாக வட இந்திய அடியாட்கள்
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு போலீசாருடன் வட இந்திய அடியாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ஹிந்தி பேசும் வட இந்தியா அடியாட்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தியானப்புரட்சிக்குப் பிறகு கடந்த 8ஆம் தேதி முதல் அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என தொண்டர்களும், எம்எல்ஏக்களும் பிரிந்தனர்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த 8ஆம் தேதி முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது முதல்வர் கனவு தகர்ந்தது.
இதனையடுத்து புதிய சட்டசபைக்குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக சட்டசபைக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டமாக சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.
ஆளுநர் மாளிகை டூ கூவத்தூர்
ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிமுக எம்எல்ஏக் கள் மீண்டும் நேற்று இரவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதிக்கு திரும்பினர். 10வது நாளாக கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் ஒரு பக்கம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் வட இந்தியாவைச் சேர்ந்த இந்தி பேசும் அடியாட்டிகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடியாட்கள் குவிப்பு
எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பாக கடந்த வாரங்களில் மன்னார்குடியைச் சேர்ந்த அடியாட்கள், சினிமா ஸ்டண்ட் நடிகர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் கூவத்தூர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தவிர அடியாட்களை போலீசார் வெளியேற்றினர். நேற்று புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எம்எல்ஏக்களை தங்கள் வசம் தக்க வைத்துக்கொள்ள வட இந்திய அடியாட்கள் அதிக அளவில் பாதுகாப்புக்குப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.