‛கபி.. கபி’.. மயிலாடுதுறையில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்.. ஏக்கருக்கு ரூ.4,000 மிச்சம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தால் ஏற்பட்ட ஆள்பற்றாக்குறையை சமாளிக்க நெல் நாற்று நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கும் இவர்கள் மாலை வரை பணி செய்வதால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை கூலி மிச்சமாகிறது. இதனால் விவசாய பணிக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்' அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒடிசா, உத்த பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு தமிழகம் வந்து பல்வேறு இடங்களில் தங்கி பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக கட்டுமான பணி, ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பண்ணை தொழில், பானிபூரி விற்பனை உள்ளிட்ட பணிகளை வடமாநில தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 2 ஆண்டுகளாக விவசாய பணிகளிலும் கூட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரை சேர்ந்த மக்கள் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய பணிக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கி பணியை தொடங்கும் வடமாநில தொழிலாளர்கள் மாலை வரை பணி செய்கின்றனர்.
மேலும் குறைந்த கூலியில் வயல் உரிமையாளர் சொல்வது போல் நாற்றை நடவு செய்கின்றனர். மேலும் வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில தொழிலாளர்கள் ஹிந்தி பாடல்களை பாடியபடி நாற்று நடவு செய்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்' அதிகரித்துள்ளது. இதுபற்றி நெலத்துகுடி கிராமத்தை சேர்ந்த கவி என்பவர் கூறியதாவது: எனக்கு 9 ஏக்கர் நிலம் உள்ளது. நான் உள்ளூர் ஆட்களை வைத்து மெஷின் நடவு அல்லது கை நடவு தான் செய்து வந்தேன். ஆனால் அவர்கள் நடவு செய்யும்போது எலி பிரச்சனை வருகிறது.
ஆனால் வடமாநில தொழிலாளர்கள் சொன்னபடி நெல் நடவு செய்கின்றனர். உள்ளூர் மக்களை நடவு பணிக்கு ஈடுபடுத்தும்போது ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் முதல் 8 ஆயிரத்துக்கு 500 வரை செலவு ஆகிறது. ஆனால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்களை பயன்படுத்தும்போதும் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை மிச்சமாகிறது. காலை 6 மணிக்கு பணியை தொடங்கும் வடமாநில தொழிலாளர்கள் மாலை வரை வேலை செய்கின்றனர். ஒரு நாளுக்கு 4 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். 2 நாட்களில் 8 ஏக்கர் நடவு செய்து விடுகின்றனர்.
சாப்பாட்டுக்கு நாம் அரிசி வாங்கி கொடுத்துவிட்டால் அவர்களே சமைத்து சாப்பிட்டு விட்டு பணி செய்கின்றனர். டீ செலவுக்கு மட்டும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விவசாய பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் இருப்பது தான். 100 நாள் வேலைக்கு உள்ளூர் மக்கள் செல்வதால் நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் நாம் சொல்லும் நேரத்துக்கு நடவு பணிக்கு அவர்களால் வர முடியவில்லை. இதனை சமாளிக்க தான் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications