தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை: இன்று பல இடங்களில் மழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,

நாடு முழுவதும் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்த தகவலை வானிலை இலாகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகத்தின் வடக்கு மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யும். இது தவிர உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications