வருது வருது வடகிழக்கு பருவமழை.... பலிக்குமா ரமணன் முன்னறிவிப்பு?
சென்னை: வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்குகிறது என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே சென்னையில் வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் அளித்த பேட்டி:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. அதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
26-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
சென்னையில் மழை
மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வேப்பேரி, நுங்கம்பாக்கம், தாம்பரம் பகுதிகள் மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் நேற்று பகலில் மழை தூறிக்கொண்டே இருந்தது.