ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி பெறவில்லை… அமைச்சர் கருப்பண்ணன் குற்றச்சாட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் இருந்து எந்தவித அனுமதியையும் மத்திய அரசு பெற வில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் நெடுவாசல் கிராமத்தின் நீர் வளம் குன்றி பாலைவனமாக மாறிவிடும் என்று அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது. இதனையடுத்து, நெடுவாசல் மக்கள் 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெறவில்லை என்று தமிழக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து அனுமதி பெறாமலேயே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்த போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications