மூன்று தமிழர் விடுதலை தீர்ப்பை நான் அரசியலாக்கவில்லை: கருணாநிதி விளக்கம்
சென்னை: ராஜிவ் வழக்கில் 3 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தை பேரறிவாளன் விவகாரத்தை தாம் அரசியலாக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜிவ் வழக்கில் 3 தமிழர் விடுதலை குறித்து 25-ந் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் இப்படி தெரிவித்திருப்பது அரசியல் சார்புடையதாகும் என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
ஆனால் கருணாநிதிக்கு சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் உட்பட தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
கேள்வி: பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை பற்றி உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட கருத்தை, அரசியல் ஆக்க வேண்டாமென்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தி.மு. கழகம் கோரிக்கை வைத்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால் நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்பதற்காகத்தான், சதாசிவம் பொது விழா ஒன்றில் இது பற்றி பேசுவது சரிதானா என்று கேட்டிருந்தேன். அரசியல் ஆக்குவதற்காக அல்ல.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
கேள்வி: தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில், உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: நன்றாக இருக்கிறது.
கேள்வி: அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றையதினம் சென்னையில் பேசும்போது, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தன்னலத் திட்டங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: சொத்துக் குவிப்பு வழக்கு எங்கள் மீது நடக்கவில்லை. அவர் மீது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி முதல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக் குவிப்பு வழக்கு அந்த அம்மையார் மீது தான் நடக்கிறது.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், தங்க நாற்கரை சாலைத் திட்டம் போன்றவற்றில் டி.ஆர். பாலுவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி மு.க. அழகிரி சாட்டிய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருக்கிறாரே?
பதில்: யார் குற்றம் சாட்டினார்கள் என்பதல்ல; திட்டவட்டமாக டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதைச் சொல்லட்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.