ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 'நோட்டா' உண்டு: சந்தீப் சக்சேனா
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க, 'நோட்டா' பொத்தான் இடம்பெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா.
அப்போது அவர் கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவின்படி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தேர்தலில் போட்டியிடுவோர் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க, 'நோட்டா' பொத்தான் பொருத்தப்படுகிறது. அதேபோல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தான் 'நோட்டா'விற்கு ஒதுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.