சென்னையில் 2-வது நாளாக செவிலியர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
சென்னையில் 2-வது நாளாக செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000 செவிலியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு தொகுப்பு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாததால், செவிலியர்கள் சென்னையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதனால் நேற்று காலையில் இருந்தே அதிக அளவில் அந்தப் பகுதியில் செவிலியர்கள் கூடியதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான செவிலியர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சாலை மறியல் செய்ய முயன்ற 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் போராட்டம் நடந்துவருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று செவிலியர்கள் அறிவித்து உள்ளனர். செவிலியர்களின் இந்தப் போராட்டத்தால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications