வர்தா புயலையே தாங்கிவிட்டேன்.. டிடிடி தினகரன் பெரிய பிரச்சனையா? மன்னார்குடியில் பேசிய ஓபிஎஸ்
வர்தா புயலையே தாங்கிவிட்டேன், டிடிடி தினகரன் எல்லாம் பெரிய பிரச்சனையா என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
மன்னார்குடி: வர்தா புயலையே தாங்கிவிட்டேன், டிடிடி தினகரன் எல்லாம் பெரிய பிரச்சனையா என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
ஒரு மாதம் மன்னார்குடியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் பெரிய அளவில் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். முழுக்க முழுக்க ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டமாக இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பெரிய கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். இதில் அவர் முழுக்க முழுக்க தினகரனுக்கும், சசிகலா குடும்பத்திற்கும் எதிராக பேசினார்.
அதில், எங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். முதுகெலும்பு இருப்பதால்தான் காவிரி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். திமுகா கட்சியால் கடைசி வரை காவிரி போராட்டத்தில் வெற்றிபெறவே முடியவில்லை.
என்னை முதல்வராக தேர்வு செய்தது ஜெயலலிதாதான். இதோடு மூன்று முறை முதல்வர் ஆகிவிட்டேன். சசிகலா குடும்பத்திற்கு பயந்துதான், ஜெயலலிதா என்னை முதல்வர் ஆக்கினார். ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தின் மீது எப்போதுமே நம்பிக்கை கிடையாது.
இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும். இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும் என தினகரன் பகல் கனவு காண்கிறார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகத்தான் அமோக வெற்றிபெறும்.
சசிகலா குடும்பத்தால் இனி அதிமுகவிற்கு வரவே முடியாது. தினகரன் அவரது உறவினர்களிடமும் சண்டையிட்டு வருகிறார். தினகரனுக்கும் அதிமுகவிற்கு எந்த தொடர்பும் கிடையாது.
நான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் திவாகரன்.திவாகரன் இல்லாதபோது என்னை மிரட்டி கையெழுத்து வாங்கியது சசிகலாதான். அவர்கள் குடும்பத்திலேயே இவ்வளவு பிரச்சனை உள்ளது.
நான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டியடித்தேன். அதற்கு பிறகு தமிழகத்திற்கு எந்தப் புயலும் வரத் தயங்குகிறது. புயலையே தாங்கிவிட்டேன், இதெல்லா எனக்கு பிரச்சனையே இல்லை என்று துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.