பன்னீர்செல்வம் ஒரு ஆஸ்தான பூபதி.. அம்பள குடுக்கை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
ஓ.பன்னீர்செல்வத்தை ஆஸ்தான பூபதி, அம்பள குடுக்கை என சரமாரியாக வசை பாடியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அம்பள குடுக்கை என்றும் ஆஸ்தான பூபதி என்றும் அதிமுகவின் செய்தி தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் வசை பாடியுள்ளார். மேலும் தீபா ஒரு தீமை என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக செய்தி தொடர்பாளரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது நெறியாளர் கேள்விக்கு அசால்ட்டாக பதில் கூறினார். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவையும் சரமாரியாக வசை பாடினார். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாஞ்சில் அளித்த சில பதில்கள்..
தீபா அரசியலுக்கு வர தகுதியற்றவர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அரசியலுக்கு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் தீபா அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்றார். ஜெயலலிதாவின் தோழி அரசியலுக்கு வரலாம், ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அரசியலுக்கு வரக்கூடாதா என நெறியாளர் கேட்டார்.
ஜெ.அண்ணன் மகள் என்றால்?
அதற்கு பதில் கூறிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவின் அண்ணன் மகளாக இருந்தால் அரசியலுக்கு வந்து விடலாமா? என்றார். மேலும் தீபா கழகத்துக்காக என்ன தியாகம் செய்தார்? அவர் செய்த சேவை என்ன? அவருக்கும் கழகத்துக்கும் என்ன தொடர்பு என்றும் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.
சசி- நட்புக்கு கிடைத்த மரியாதை
மேலும் 11 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மியான்மர் அதிபர் ஆங்சாங் சூகியையும் அவரது நண்பரையும் மேற்கோள் காட்டிய நாஞ்சில் சம்பத் சசிகலா அரசியலுக்கு வரலாம், அவர் அரசியலுக்கு வருவது சரி என்றார். மேலும் சசிகலா அரசியலுக்கு வந்தது ஜெயலலிதாவுடனான நட்புக்கு கிடைத்த மரியாதை என்றும் அவர் கூறினார்.
தீபா ஒரு தீமை
மேலும் தீபா ஒரு தீமை என்றும் நாஞ்சில் சம்பத் சாடினார். ஜர்னலிசம் படித்துள்ள அவர் பத்திரிக்கையாளர் பணியை தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ் ஒரு நடிகர் என்றார்.
ஓபிஎஸ் அம்பள குடுக்கை- எடப்பாடி அப்பாவி
ஓபிஎஸ் ஆஸ்தான பூபதி என்றும் அவர் ஒரு அம்பள குடுக்கை என்றும் நாஞ்சில் சம்பத் வசைபாடினார். மேலும் காலில் விழுந்து காரியம் சாதிப்பதிலும் கணக்கில்லாத செல்வம் சேர்ப்பதிலும் வல்லவர் என்றும் சாடினார்.அதே நேத்தில் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஒரு அப்பாவி என்றும், ஒரு இயல்பான மனிதர் என்றும் நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளினார்.