தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.. துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..?.. அட போங்கப்பா!
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரக்கப் பறக்க நடந்த இந்த அவசர சந்திப்பு, அவர் சுமார் அரை மணி நேரம் நடந்தது.

ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய நிலையில், அடுத்த அதிரடியாக மாலை 6 மணியளவில், ஆளுநர் மாளிகைக்கு, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கார்களில் வருகை தந்தனர். அப்போது ராமமோகன் ராவும் உடனிருந்தார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என அப்பல்லோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கலாமா என்றும், துணை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்று காலைதான் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அரசிடமிருந்து ஆளுநருக்கு, கொடுக்கப்பட்ட சமிக்ஞைகளை தொடர்ந்து இதுபோன்ற தற்காலிக ஏற்பாடுகளை நோக்கி ஆளுநர் நகர்வுகள் அமைவதாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் காவிரிப் பிரச்சினை குறித்தும், அரசாங்க ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பேசி தெரிந்து கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிக்கை விட.. அட போங்கப்பா.. என்று சப்பென்றாகி விட்டது அத்தனை பேருக்கும்.












Click it and Unblock the Notifications