ஜி.ஓ 354.. தேர்தல் வாக்குறுதியை எப்போதுதான் நிறைவேற்றுவார் முதல்வர் ஸ்டாலின்? - ஓபிஎஸ் கேள்வி!
சென்னை : மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்து 23-10-2009 நாளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசாணை எண் 354 நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணை 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியை விட்டுச் செல்லும் வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் பல்லாண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 2019 ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
மேலும், போராடுவது அவர்களுடைய உரிமை மற்றும் கடமை என்றும், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. தி.மு.க ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அரசு மருத்துவர்களுடைய கோரிக்கையினை நடைமுறைப்படுத்த தி.மு.க அரசு மறுத்து வருகிறது.

தி.மு.க.வின் முந்தைய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணையையே அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறது? இது குறித்து நான் ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தேன். அரசு மருத்துவர்களும் போராட்டங்களின் மூலம் அரசின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
இதுவும் திமுகவின் இரட்டை நாக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகின்ற திட்டத்தை செயல்படுத்தும் தி.மு.க அரசு, மக்களின் நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications