நாங்க அப்படி சொல்லவே இல்லையே.. “பொதுச்செயலாளர்”..அப்போ கோர்ட்டில் சொன்னது? மீண்டும் ஓபிஎஸ் ‘பல்டி’?
சென்னை : ஓபிஎஸ் தரப்பு, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் போட்டியிட தயார் என்று கூறியிருந்த நிலையில், தற்போது பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக நான் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது ஓபிஎஸ் தரப்பு. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவந்த ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தேர்தலில் களமிறங்க தயார் எனக் கூறியது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், தாங்கள் அவ்வாறு கூறவில்லை என ஓபிஎஸ் 'பல்டி' அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது வாதங்களை முன்வைத்த ஓபிஎஸ் தரப்பினர், பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி எட்டுவதற்காக அவருக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு என கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் வகுத்த விதிகளை மீறும் வகையில், வேறு யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கான விதிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகத் தான் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பதவிகளில் இருக்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
பொதுச் செயலாளர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட ஓபிஎஸ் தயார் என்றும், வழக்கையும் வாபஸ் பெற தயார் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார்.
பொதுச் செயலாளர் : இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அவர் வகித்த பதவியை வகிக்க வேறு யாருக்கும் தகுதி இல்லை என தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கூறி வந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, 'பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் போட்டியிட தயார்' எனக் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஓபிஎஸ் பல்டி : இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து இரட்டை நிலைப்பாடு ஏன் என்ற கேள்விக்கு இன்றைய பிரஸ் மீட்டில் பதில் அளித்த ஓபிஎஸ், "அதிமுகவின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் போன்ற உச்சபட்ச பதவிக்கு தேர்தல் நடத்தினால் அதில் போட்டியிடத் தயார் என்று தான் ஐகோர்ட்டில் தெரிவித்தோம். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை. ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications