"பப்ளிக்.. பப்ளிக்.. பப்ளிக்"... மகா அடக்கத்துடன் வளைய வரும் ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: முதலமைச்சர்.. இந்தப் பதவிக்காக கனவு காணும் தலைவர்கள் எத்தனை பேர்.. மக்களுக்கே கூட முதல்வர் பதவி என்பது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால் அந்தப் பதவி கையில் கிடைத்தும் கூட அதை சுத்தமாக அனுமதிக்காமல் ஒருவரால் அமைதி காக்க முடியும், அடக்க ஒடுக்கமாக இருக்க முடியும், ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்க முடியும் என்றால் அது கண்டிப்பாக ஓ.பன்னீர் செல்வம் ஒருவரால்தான் முடியும்.
அமைச்சராக இருந்தபோது இருந்ததை விட இன்னும் அமைதியாக வேலை பார்த்து வருகிறாராம் ஓ.பன்னீர் செல்வம்.
முதல்வர் பதவியை அவர் ஒருபோதும் சுகமானதாக, சொர்க்கமானதாக நினைத்ததே இல்லை என்று கூறுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

அடக்கம் - அமைதி
ஓ.பன்னீர் செல்வம் எப்போதுமே அடக்கமானவர், அமைதியானவர், அதிர்ந்தும் பேசாதவர்.

யாரையும் திட்ட மாட்டார்
அமைச்சராக இருந்தபோதும் கூட அவரிடம் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மிகவும் நிம்மதியாக இருப்பார்களாம். காரணம், யாரையும் இவர் திட்டவே மாட்டாராம். பணிவோடுதான் பேசுவாராம். முக்கியமாக மரியாதையாக பேசுவாராம்.

விஜயகாந்த் மாதிரி பேச மாட்டார்
விஜயகாந்த் பொது இடங்களில் பேசுவாரே அசிங்கமாக, தாறுமாறாக, மோசமாக.. அப்படியெல்லாம் ரகசியமாகக் கூட பேசியதில்லையாம். யாராக இருந்தாலும் வாங்க, போங்கதான். அதிகபட்சம் வாப்பா, போப்பா அளவில்தான் அவர் பேசுவாராம்.

தம்பி என்று கூறும் முதல்வரைப் பார்த்திருக்கிறீர்களா...!
ஒரு அதிகாரியைப் பார்த்து தம்பி என்று பாசத்தோடு அழைக்கும் முதல்வரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அப்படிப் பாசத்தோடும் பேசக் கூடிய இயல்பு கொண்டவர்.

இன்னும் அடக்கம்
இப்படிப்பட்டவர் இப்போது முதல்வர் பதவியில் அமர நேரிட்டதால் இன்னும் அடக்கமாக மாறியுள்ளார். முன்பு போல பணிவும், மரியாதையும் அவரிடம் மாறாமல் உள்ளது. இன்னும் சொல்வதானால் மேலும் கூடிப் போயுள்ளதாம்.

உறவினர்களுக்குத் தடா
முதல்வர் பதவியில் அமர்ந்ததுமே முதல் உத்தரவே தனது குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும்தான் போட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

மெட்ராஸ் பக்கமே வராதீக
யாரும் சென்னைக்கு வரக் கூடாது. பொது விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது. அதிகாரிகளைப் பார்ப்பது, செய்தியாளர்களைச் சந்திப்பது என்ற பேச்சுக்கே இடம் தரக் கூடாது என்பது பன்னீர் செல்வம் தனது உறவினர்களுக்குப் போட்டுள்ள கட்டளையாகும்.

அமைச்சர் போலவே
மேலும் ஒரு அமைச்சர் போலவே தொடர்ந்து அவர் நடந்து கொள்கிறார். முதல்வர் என்ற பந்தாவையும், அதிகாரத்தையும் அவர் மறந்தும் கூட காட்டுவதில்லை.

மகன்களுக்கும் கட்டுப்பாடு
மேலும் தனது மகன்களுக்கும் பல கட்டுப்பாடுகளை அவர் விதித்துள்ளாராம். அம்மாவுக்கோ, கட்சிக்கோ தனக்கோ கெட்ட பெயர் ஏற்படும் வகையில் ஒரு சின்ன தும்மல் கூட உங்களிடமிருந்து வரக் கூடாது என்று கண்டித்துச் சொல்லியுள்ளாராம். மகன்கள் பயன்படுத்தி வந்த செல்போன்களைக் கூட அவர் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
இப்ப தெரியுதா.. ஏன் ஜெயலலிதா, எல்லோரையும் விட ஓ.பன்னீர் செல்வம் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார் என்று.












Click it and Unblock the Notifications