இழுத்தடிக்கும் எடப்பாடி.. கடும் அதிருப்தியில் பன்னீர்செல்வம் தரப்பு!
ஓபிஎஸ்சை நம்பியும், எடப்பாடி கொடுத்த நம்பிக்கை மீது மதிப்பு வைத்தும் இணைப்புக்கு சம்மதித்த சீனியர்கள், விரைவில் எடப்பாடி- பன்னீருக்கு எதிராக போர்க்கொடித்தூக்குவார்கள் என தெரிகிறது.
சென்னை: பன்னீர் செல்வம் அணியில் உள்ள சீனியர்கள் அதிருப்தியிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வத்தை தூக்கிப்பிடித்த அதிமுக சீனியர்கள் பலரும், கே.பி.முனுசாமியிடம் புலம்பி வரு்கிறார்கள். அதிமுகவில் இணைந்தபோது, ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அவரை ஆதரித்த சீனியர்கள் அனைவருக்கும் அரசு பதவியில் அமர வைப்பது என உறுதிமொழி கொடுத்திருந்தார் எடப்பாடி.
ஓபிஎஸ்சும் அதை மையப்படுத்தி இணைப்புக்கு சீனியர்களை ஒப்புக்கொள்ளவைத்தார். ஆனால், ஓபிஎஸ்சும் மாஃபா பாண்டியராஜனும் பதவியில் உட்கார்ந்து விட்டார்.
சீனியர்கள் கோபம்
இந்த நிலையில், சீனியர்களுக்கு கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே வருவதால் ஓபிஎஸ் மீது செம காட்டத்தில் உள்ளனர்.
அதனை ஓபிஎஸ்சிடம் நேரில் காட்ட தயக்கமாக இருப்பதால், முனுசாமி மூலம் அணுகியுள்ளனர்.
முனுசாமியிடம் தஞ்சம்
முனுசாமியிடம், " நீங்கள் தான் ஓபிஎஸ், எடப்பாடி இருவரிடமும் கோபமாக பேசமுடியும். அதனால் கொடுத்த உறுதி மொழி என்னாச்சுன்னு கேளுங்கள். தனக்கு எந்த அதிகாரத்தையும் எடப்பாடி கொடுக்கவில்லைன்னதும் மோடியை சந்தித்து குற்றச்சாட்டுகளை வைத்து எடப்பாடியிடம் பேசுங்கள் என அழுத்தம் கொடுக்குறார் ஓபிஎஸ். ! ஆனா, நம்ம விசயத்தை அவர் பேசுவதே இல்லை. தனது மகன்கள் சொல்வதற்குதான் முக்கியத்துவம் தருகிறார். நம்மளை கண்டுக்கொள் வதில்லை. அதனால், ஓபிஎஸ்சிடம் எங்கள் கோபத்தை சொல்லுங்கள் " என வலியுறுத்தி வருகின்றனர்.
எடப்பாடியிடம் பேச்சு
இல்லையெனில், எடப்பாடியிடம் நீங்களே நேரடியாக பேசுங்கள் எனவும் கேட்டபடி இருக்கிறார்கள் சீனியர்கள். அவர்களை சமாதானப்படுத்திய முனுசாமி, எனக்கும் அவர்கள் இருவர் மீதும் அதிர்ப்தியும் வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களிடம் பேசியிருக்கிறேன். நிச்சயம் விரைவில் நல்லது நடக்கும். இல்லாதுபோனால் நாம் ஒரு முடிவெடுப்போம் என்று சொல்லியிருக்கிறார் முனுசாமி.
போர்க்கொடி?
ஓபிஎஸ்சை நம்பியும், எடப்பாடி கொடுத்த நம்பிக்கை மீது மதிப்பு வைத்தும் இணைப்புக்கு சம்மதித்த சீனியர்கள், விரைவில் எடப்பாடி- பன்னீருக்கு எதிராக போர்க்கொடித்தூக்குவார்கள் என தெரிகிறது. இரட்டை இலை விவகாரத்தில் ஒரு தெளிவுகிடைத்ததும் அதற்கேற்ப இவர்களின் கோபம் வெளிப்பட உள்ளது.