நிதி அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் 'அம்மா' படம் முன்னிலையில் நடந்த 2-வது கேபினட் கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று இரண்டாவது முறையாக நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கவனித்து வந்த இலாகாக்கள் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை வகிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்ட மசோதா இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று இரண்டாவது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழகம் சார்பாக எடுத்து வைக்கப்பட உள்ள கருத்துக்கள், காவிரி விவகாரம், மத்திய அரசின் உதய் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications