ஓ.பி.எஸ். தம்பியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மதுரை: தலித் பூசாரி தற்கொலை விவகாரத்தில் சிக்கி நகராட்சித் தலைவர் பதவியை இழந்து கைதாகும் அபாய நிலையில் உள்ள தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலித் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சிக்கியுள்ளார் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். நாகமுத்து தற்கொலை வழக்கி்ல் சிக்கி பதவியை இழந்தார். இவரது வீட்டில் போலீஸ் ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தில் என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. கீழ் கோர்ட்டில் நான் சரண் அடையும் நாளிலேயே ஜாமீன் மனுவையும் பரிசீலிக்க வேண்டும். சரண் அடையும் நாளில் ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.
கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் தற்போது வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பதால், அதற்காக தான் கீழ்கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்போது, அன்றைய தினமே தனது மனுவை பரிசீலித்து ஜாமீன் வழங்க உத்தரவிடக்கோரியுள்ளார் ஓ.ராஜா.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.ராஜா சார்பில் வக்கீல் காந்தி ஆஜரானார். அவர் நீதிபதி முன்பு ஆஜராகி வாதிடுகையில், பூசாரி தற்கொலை வழக்கில் 2012ம் ஆண்டே ஓ.ராஜா உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். தற்போது இந்த வழக்கில் புதிதாக வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது ஜாமீன் கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாக காந்தி தெரிவித்தார்.
ஆனால் ஜாமீன் வழங்க புகார்தாரர் சுப்புராஜ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரத்தினம், அழகுமணி ஆகியோர், ஓ.ராஜா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து, மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கோரினர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.