ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு... கோட்டைக்காடு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த கோட்டைக்காடு கிராம மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டைக்காடு கிராமத்தில் 1991ம் ஆண்டு மண்ணெய் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. அதில் இருந்து ஒருவிதமான வாயும், எண்ணெய் கசிவும் வெளியேறி வருவதாகவும், அதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுக்கோட்டையில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல் மக்கள் கடந்த 16 நாட்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று கோட்டைக்காடு கிராம மக்களும் தங்களது கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு எதிராக 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். போராடும் மக்கள் அதனை நிராகரித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 6வது நாளாக கோட்டைக்காட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து இன்று கோட்டைக்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் புதுக்கோட்டை சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.