இப்போது திமுக என்ன செய்ய வேண்டும்?.. ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து இதுதான்!
சென்னை: பெரும் அரசியல் நெருக்கடியில் தமிழகம் சிக்கியுள்ளது. மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆளாளுக்கு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடமே கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் சொன்ன பதிலை இப்போது பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் வரலாறு காணாத வகையில் அதிக இடங்களில் வென்ற வலுவான எதிர்க்கட்சி திமுகதான். தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இத்தனை அதிகமாக இடங்களுடன் இதுவரை எந்த எதிர்க்கட்சியும் இருந்ததில்லை.
ஜெயலலிதாவுக்கு ஆட்சியளிக்க அதிகாரம் கொடுத்த மக்கள், அவரது ஆட்சியை கண்காணிப்பில் வைக்க திமுகவுக்கும் கொடுத்த அதிகாரம்தான் இந்த 89 எம்எல்ஏக்கள். துரதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்து விட்டார். இப்போது அதிமுக ஆட்சி என்ற பெயரில் ஏகப்பட்ட நாடகங்கள். இந்த சூழ்நிலையில் தற்போது திமுக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் நடத்திய போல் முடிவுகள் இதோ.

திமுக என்ன செய்ய வேண்டும்?
இப்போது திமுக என்ன செய்ய வேண்டும் என்பதே நாம் முன்வைத்த கேள்வி. இந்தக் கருத்துக் கணிப்புக்கு வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு. அதன் முடிவுகளைக் காண்போம்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
சட்டசபையில் அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதே அதிகளவில் பதிவான கருத்தாக உள்ளது. அதாவது மொத்தப் பேரில் 39.34 சதவீதம் பேர் இந்த கருத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குகள் 7646.

மொத்த எம்எல்ஏக்களும் இப்போதாவது விலக வேண்டும்
திமுகவைச் சேர்ந்த 89 எம்எல்ஏக்களும் சற்றும் தாமதிக்காமல், குறைந்தது இப்போதாவது விலக வேண்டும் என்ற கருத்துக்கு 13.57% ஆதரவு கிடைத்துள்ளது. கிடைத்த வாக்குகள் 2,638.

மக்கள் மனதுக்கேற்ற முடிவை எடுக்க வேண்டும்
மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதற்கேற்ப திமுக முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு கிடைத்துள்ள ஆதரவு 16.46% ஆகும். அதாவது பதிவான வாக்குகள் 3,199.

எதுவும் செய்யாமல் அமைதி காத்தாலே போதும்
திமுக எதுவுமே செய்ய வேண்டாம். இப்போது போல தொடர்ந்து அமைதியாக இருந்தாலே போதும் என்ற கருத்துக்கும் பரவலான ஆதரவு காணப்படுகிறது. அதாவது 30.62% சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பதிவான வாக்குகள் 5592 ஆகும்.












Click it and Unblock the Notifications