காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை!
ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாகியுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 6 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணை, ஹேரங்கி அணை ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு வாரமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் ஊட்டமலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து 6 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.