100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழனும் தங்கமே- கருணாநிதியை வாழ்த்திய மூத்த தொண்டர் 'பாப்பாத்தி'
திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் மூத்த தொண்டர் பாப்பாத்தி சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Recommended Video
சென்னை : திமுக தான் மக்களுக்கான ஆட்சியை வழங்கக்கூடியது. விரைவில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என திமுக தலைவர் கருணாநிதியைக் கண்ட அக்கட்சியின் மூத்த தொண்டர் பாப்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு சமூக வலைத்தளங்களால் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கான கள ஆய்வு கூட்டத்தை நடத்தினார். மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டு இருந்த இந்தக் கூட்டத்தில் உட்கட்சிப் பூசலைக் களையவும், கட்சியைப் பலப்படுத்தவும் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து 74 வயதான மூதாட்டி பாப்பாத்தி என்பவர் வந்திருந்தார். கட்சியின் 50 ஆண்டு கால தொண்டரான அவர், எந்தப்பதவியில் இல்லாத போதும் கட்சியின் நிலை குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஸ்டாலினுடன் பேச விருப்பம்
ஆனால், அப்போது அவரால் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இது ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாப்பாத்தியுடன் உரையாடல்
இதனையடுத்து ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடத்தில் பேசிய ஸ்டாலின் மூதாட்டி பாப்பாத்தியை அழைத்து வரச் செய்தார். அவருக்கு தனது வீட்டில் தேநீர் வழங்கி உபசரித்ததோடு மட்டுமில்லாமல் அவரிடம் உரையாடினார்.
கருணாநிதியை நேரில் சந்தித்த தொண்டர்
அதற்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது, ‘நீங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வேண்டும் தங்கமே.. விரைவில் கழக ஆட்சி வரும். உங்களின் ஆசியோடு ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வருவார். நாங்கள் அதற்காக உழைப்போம்' என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
நெகிழ்ச்சியுடன் முத்தம்
பிறகு கண்ணீர் ததும்ப கருணாநிதியின் கையில் முத்தம் கொடுத்து விடைபெற்றார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நாளை தன் வாழ்வில் மறக்கமுடியாது என்று சந்திப்புக்குப் பிறகு மூதாட்டி பாப்பாத்தி தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது.