புடவையுடன் தாமிரபரணியில்.. தலைகீழாக டைவ் அடித்த பாட்டி.. வீடியோவை பார்த்து மிரண்ட ஐஏஎஸ் அதிகாரி
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஓருவர் தலைகீழாக குதித்து குளித்து மகிழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக டைவ் அடித்து குளித்த பாட்டியின் வீடியோவை பார்த்த பிரபல பெண் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு வியந்து போய் வெளியிட்ட ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
வாழ்ந்தா இப்படி வாழனும் என்று ஏங்க வைத்துள்ளார் திருநெல்வேலி பாட்டி ஒருவர். கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளவர்களுக்கு கிடைக்காத மகிழ்ச்சி இது என கொண்டாடுகிறார்கள் அந்த பாட்டியின் செயலை. முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல, வயது எதற்கும் தடையில்லை என்று பாட்டியின் சாகச வீடியோவை பார்த்து மிரண்டு போய் பதிவிட்டு வருகிறார்கள் பலர்.
இன்று 20 லிட்டர் தண்ணீர் கேனை தூக்கவே யாராவது ஒருவரது உதவி தேவை என்று இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில், அந்த காலத்தில் பெண்கள் பல கடினமான விஷயங்களை மிக சர்வ சாதாரணமாக செய்வார்கள். இரண்டு குடம் தண்ணீரை தூக்கி கொண்டு மூன்றாவதாக ஒரு குடம் தண்ணீரையும் கையில் தூக்கியபடி வருவார்கள். இது அவர்களது வலிமைக்கு ஒரு உதாரணமே.

வீட்டில் முடக்கம்
அதேநேரம் வயதாகி விட்டால், வீட்டில் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற நிலையே தற்போது உள்ளது. உடல்நிலையில் தளர்வு, வயதான உடன் வரும் நோய்கள் போன்றவற்றால் வேகமாக எதையும் செய்ய முடியாது என்று அமைதியாக இருப்பவர்களே அதிகம். அதிலும், மூதாட்டி என்றால், முடிந்த வேலை செய்வது ஓய்வு எடுப்பது சீரியல் பார்ப்பது என்பது வழக்கமாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் 60 வயதை கடந்த பாட்டியின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

60 வயது பாட்டி
திருநெல்வேலி அருகே 60 வயதை கடந்த பாட்டி ஒருவர் தமிரபரணியில் தலைகீழாக குதித்து அசத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் மதகு மேல் இருந்து பாட்டி தலைகீழாக குதிக்கிற வீடியோவை சுப்ரியா சாஹு ஐஏஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த வீடியோ தனக்கு உற்சாகத்தை அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தலைகீழாக டைவ்
சுப்ரியா சாஹூ ஐஏஏஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் தாமிரபரணியில் உயரமான மதகு அருகே ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, வயதான ஒரு பாட்டி மதகு மேல் ஏறி ஆற்றில் தலைகீழாக குதிக்கிறார். பிறகு மீண்டும் ஏறி வந்து ஆற்றில் தண்ணீர் குபீர் என மேலே தெறிக்க அமர்ந்த நிலையில் குதிக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலருக்கும், வெயிலோடு விளையாடி, வெயிலாடி உறவாடி என்று பாட்டு முணுமுணுத்தபடி தங்கள் இளமைக்காலம் ஞாபகம் வந்திருக்கிறது. அதை கருத்துக்களாக பதிவிட்டு வருகிறார்கள்.

புடவை அணிந்த பாட்டி
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு கூறுகையில். "தமிழ்நாட்டில் கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் புடவை அணிந்த மூத்த பெண் எளிதாக குதிப்பதைப் பார்த்து வியந்தேன். இது வழக்கமான செயல், அதில் அவர்கள் வல்லவர்கள் என்று எனக்குச் சொல்லப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் மதகு மேல் இருந்து குதிக்கிற இந்த பாட்டிக்கு நீச்சல் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதுபோல, அவர் முதல்முறையாக குதிப்பது மாதிரி தெரியவில்லை. வழக்கமாக இப்படி குதிப்பவராக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது
|
தமிழ்நாட்டு பாட்டி
தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஒருவர் தலைகீழாக குதித்து சாகசம் செய்யும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாட்டி மாதிரி வாழ்ந்துட்டு போயிடனும் என்று உருகுகிறார்கள். சாகசம் செய்ய வயது ஒரு தடையே இல்லை என்கிறார்கள். தமிழ்நாட்டு பாட்டியின் சாகசத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். நேஷனல் மீடியாக்களே பாட்டியின் வெகுவாக கொண்டாடுகின்றன.












Click it and Unblock the Notifications