ஒன்னும் கிடைக்கவில்லை: மாயமான விமானத்தை தேட வந்த அதிநவீன கப்பல் திரும்பி சென்றது
சென்னை: மாயமான டோர்னியர் விமான தேடலில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒலிம்பிக் கேன்யான் என்ற கப்பல் திரும்பிச் சென்றுள்ளது.
கடந்த 8ம் தேதி மாலை சென்னையில் இருந்து பாக் ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு சென்ற கடலோர காவல்படையைச் சேர்ந்த டோர்னியர் விமானம் அன்று இரவு நாகை அருகே மாயம் ஆனது. விமானத்தில் விமானி, துணை விமானி, திசை காட்டி என்று 3 பேர் இருந்தனர்.

சிதம்பரம் கடல் பகுதியில் டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை கப்பல்கள் 12ம், கடற்படையின் கப்பல்கள் 6ம், விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிநவீன வசதிகள் உள்ள சாகர்நிதி கப்பலை கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணிக்கு அனுப்பியது. ஆனால் விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததை அடுத்து அந்த கப்பல் திரும்பப் பெறப்பட்டது.
சாகர்நிதிக்கு பதிலாக காக்கிநாடாவில் இருந்து ஒலிம்பிக் கேன்யான் என்ற கப்பல் வரவழைக்கப்பட்டது. அந்த கப்பல் கடலுக்கு அடியில் விமானத்தை 3 நாட்களாக தேடியும் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த கப்பல் நேற்று காக்கிநாடாவுக்கு திரும்பிச் சென்றது.
இது குறித்து கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பலான ஒலிம்பிக் கேன்யான் கடலுக்கு அடியில் வீடியோ எடுக்கும் பணியை செய்தது. ஆனால் தடயம் எதுவும் கிடைக்காததால் அது திரும்பிச் சென்றது. சிதம்பரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் டோர்னியர் விமானம் விழுந்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. அதனால் அந்த பகுதியில் 5 இடங்களில் தீவிரவமாக தேட கடலோர காவல் படை தலைமையகத்திற்கு தகவல் அளித்துள்ளோம்.
விமானத்தை தேட விரைவில் கடலோர காவல்படையின் அதிநவீன கப்பல் வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications