சிவகாசி: பட்டாசுத் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் பலி
சிவகாசி: சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம். இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் இன்று வழக்கம் போல ஊழியர்கள் பணி புரிந்துக் கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசுகளுக்கு வெடி மருந்து அடைக்கும் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தீ மளமளவென தொழிற்சாலையின் அனைத்து அறைகளுக்கும் பரவியது.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையின் 6 அறைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், ஊழியர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.