7ம் வகுப்பு மாணவியைக் கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
சேலம்: 7ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம், செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியின் 12 வயது மகள், தம்மம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி, காலை பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை வீடு திரும்பாததால் பதட்டமடைந்த அவரது தந்தை மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற இளைஞர் அச்சிறுமியை மும்பையில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்க வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, தம்மம்பட்டி போலீஸார் மும்பை சென்று செல்வியை மீட்டுவர நடவடிக்கை எடுத்தனர். ஆனால், போலீசார் மும்பை வருவதையறிந்த குமார் சிறுமியுடன் நேற்று காலை, தம்மம்பட்டிக்கு வந்துள்ளார்.
தகவலறிந்த போலீசர், விரைந்து சென்று குமாரைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவு கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சேலம் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்டுள்ள குமார் ஏற்கனவே மணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.