மதுரை நரபலி: மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.. இதுவரை 7 கண்டுபிடிப்பு
மதுரை: மதுரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாக கிளம்பியுள்ள புகாரின் பேரில் அவர்களது உடல்களைப் புதைத்ததாக கூறப்படும் இடத்திலிருந்து இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைத்ததாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் ஐஏஎஸ்ஸிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்தபோது நான்கு எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்தார் சகாயம்.
அதன் பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜே.சி.பி. டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்களை அழித்தல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே தோண்டும் பணி நடந்த நிலையில் அந்த இடத்தில் மேலும் 10 அடிக்கு தோண்டிப் பார்க்க சகாயம் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் தோணுடம் பணி நடந்து வருகிறது. அதில் முதல் நாள் மேலும் 2 எலும்புக் கூடுகள் கிடைத்தன. இன்று இன்னொரு எலும்புக் கூடு சிக்கியது. இத்துடன் சேர்த்து மொத்தம் 7 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.
இதனால் இந்த இடத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்கள்தான் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.