அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி: கோவையில் மேலும் ஒருவர் கைது
கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் மேலும் ஒருவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். இவரைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த சதாம் உசேன், நவுசாத், ரகமத் துல்லா, உமரி, அப்துல்ரசீத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இச்சதிச் செயலில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், பதுங்கியுள்ள நபரைக் கைது செய்ய ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஒரு வீட்டில் தேடப்பட்டு வரும் நபர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வீட்டைச் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த நபரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து அந்நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைதானவர் நெல்லை மாவட்டம் விஜயாபதி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்கலாம் மகன் குலாம் என்கிற சாகுல் அமீது(வயது 25) என்பது தெரியவந்தது.
மேலும், குலாமுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதில் தொடர்பு இருப்பது உறுதியானது. அத்துடன் அவர் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
சுரேஷ்குமாரை கொலை செய்வதற்காக சென்னைக்கு சென்றிருந்த குலாம் அங்கு கொலை திட்டத்தை முடித்துவிட்டு பின்னர் திருப்பூருக்கு வந்து பதுங்கி இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின்னர் கோவைக்கு வந்த குலாம் செல்வபுரத்தில் உள்ள உமரி என்பவரது வீட்டில் வசித்து அர்ஜூன் சம்பத்தை கொல்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டியதில் பங்கேற்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து குலாமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .












Click it and Unblock the Notifications