சேலத்தில் 3 பேருக்குதான் டெங்கு பாதிப்பு.. தூத்துக்குடியில்தான் அதிகம்: தமிழக அரசு அறிக்கை
சென்னை: டெங்கு காய்ச்சல் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 1178 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் சென்னையில் 1,138 பேரும், சங்கரன்கோவிலில் 1,072 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் கோவை-942 பேர், திருப்பூர்-782 பேர், கன்னியாகுமரி-777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒரு இளைஞர், கூறுகையில், "நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் என்னோடு சேர்த்து 10 பேர் டெங்குவிற்கு சிகிச்சை பெற்றதை நானே பார்த்தேன். ஆனால் இதுவரை வெறும் 3 பேர்தான் சேலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல உள்ளது" என்றார்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் டெங்கு பாதிப்பு மிக, மிக அதிகமாக உள்ள நிலையிலும், அரசு ஏன் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications