சட்டசபையில் புயலை கிளப்பிய உடன்குடி மின் திட்டம்.. சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின்
சென்னை: உடன்குடி மின் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சிகள் டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் உடன்குடி மின் திட்டம் டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

ஸ்டாலின் கேள்வி
இந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய திமுக சட்டமன்ற தலைவர் மு.க. ஸ்டாலின் டெண்டர் ரத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்காலத்தில் உடன்குடி மின் திட்டத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டது. இடமும் ஒதுக்கப்பட்டது.
திட்டம் ரத்து ஏன்?
பெல் நிறுவனம் உடன்குடி திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதாக தகவல் தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இதுகுறித்து ஓய்வு பெய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதனிடையே உடன்குடி மின் திட்டம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உடன்குடி திட்டம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மார்சிஸ்ட் கட்சியினர் சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications