தமிழக சட்டசபைக்கு சீக்கிரமே தேர்தல் வரும்.. ஓ.பி.எஸ். திடீர் பேச்சு
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் பேச்சுவாரத்தை குழுக்கள் எல்லாம் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது.

ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்கிறார். அப்போது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதன் முதல்கட்டமாக காஞ்சிபுரத்தில் பயணத்தை தொடங்கிய ஓ.பி.எஸ் அங்கு நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகவும், கட்சியை மக்கள் ஆட்சியாகவும் கொண்டு செல்வோம். சமூக சேவை செய்பவர் தான் சட்டசபை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும்.
ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது என்றார். மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தான் வரும் என்று யாரும் கணித்து விட வேண்டாம். அதற்கு முன்பாக சட்டசபை தேர்தல் வர அதிகளவு வாய்ப்புள்ளது. தொண்டர்கள் தயாராக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications