பதவி தான் பிரதானம்... ரகசிய நிபந்தனையின் மூலம் நிரூபித்த ஓபிஎஸ்!
பணம், பதவிக்காக அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாகவும் ஜெயலலிதாவின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரகசிய நிபந்தனைகள் மூலம் நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ் என்கின்றனர்
சென்னை: பதவிக்காக மட்டுமே அதிமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறப்பட்ட விமர்சனங்களை இன்று உண்மை என உறுதிப்படுத்தி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
அதிமுக இரண்டாக பிரிந்தவுடன் தனக்கு ஆதரவளித்த சிலருடன் சேர்ந்து தனியாக செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்றும் பகீர் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு சசிகலா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயலலிதா தாக்கப்பட்டார்?
இந்நிலையில் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு செல்வதற்கு முன்னர் அவரது தலையில் யாரோ தாக்கியதால்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையை திரும்பப் பெற்றது யார்? போயஸ் தோட்டத்தில் மயங்கியவுடன் அப்பல்லோ ஆம்புலன்ஸை யார் வரவழைத்தது, அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மாயமானது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.ஹெச். பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

எய்மஸ் அறிக்கை
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஓபிஎஸ் அணியினரின் குற்றச்சாட்டுக்கு முரணான அறிக்கையை வெளியிட்டது. இத்தனை நாள்கள் விட்டு விட்டு தற்போது அறிக்கை வெளியிடுவது ஏன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழகம் முழுவதும் நடத்திவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முயற்சி என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

உண்ணாவிரதம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை பகிரங்கமாக படித்து காட்டினார். மேலும் சசிகலாவை உதவியாளர் என்றெல்லாம் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

பதவிக்காக கூப்பாடு
ஓபிஎஸ் அணியினர் முன்வைக்கும் கருத்துகள் எதுவும் உண்மையில்லை என்று சசிகலா அணியினர் தெரிவித்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பன்னீர் செல்வம்தான் முதல்வராக இருந்தார் என்றும் உள்துறை அவரது கையில்தான் இருந்தது. எனவே நீதி விசாரணைக்கு அப்போது உத்தரவிடாதது ஏன். ஓபிஎஸ் கோருவது போல் நீதி விசாரணை நடந்தால் முதலில் சிக்குவது அவராகத்தான் இருப்பார் என்று, குற்றம்சாட்டினர். மேலும் பதவியில் இருக்கும் போது ஜெயலலிதா மரணத்தை பற்றி கண்டுகொள்ளாமல் தற்போது பதவி பறிபோனவுடன் கூப்பாடு போடுவதாகவும் சசிகலா அணியினர் ஓபிஎஸ் மீது குற்றம்சாட்டினர்.

ரகசிய நிபந்தனைகள்
தற்போது அதிமுக கோஷ்டி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் பதவியும், பொதுச செயலாளர் பதவியும் தனக்கே வழங்க வேண்டும் என்றும் இதற்கு ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் ஓபிஎஸ் நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது பதவிக்காக மட்டுமே ஓபிஎஸ் கோஷ்டி, அதிமுகவை இணைக்க முயற்சிக்கிறதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications