அழுத முகத்துடன் பதவியேற்று அபார மகிழ்ச்சியுடன் விலகிய ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: அதிமுகவினர் அத்தனை பேரும் ஓ.பன்னீர் செல்வத்தை மிகுந்த பொறாமையுடன் பார்க்கின்றனர். எப்படி ஓ.பன்னீர் செல்வத்தால் மட்டும் இப்படி விசுவாசத்துடன் இருக்க முடிகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்.
2 முறை ஜெயலலிதாவின் இடத்தில் அவர் அமர வைக்கப்பட்டார். யாரிடம் கோபித்துக் கொண்டாலும், நம்பாவிட்டாலும், ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் ஜெயலலிதா மிகவும் அதீதமாக நம்புகிறார். காரணம், ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவிடம் காட்டும் விசுவாசம்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வரும் ஓ.பன்னீர் செல்வம், அரசியல்வாதிகளிடம் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் கண்ணியமானவர் என்று பெயர் பெற்றவர் ஆவார். இவரது துறை சார்ந்த அதிகாரிகளும், மிகவும் பணிவானவர், அதிர்ந்து பேசாதவர், கோபித்துக் கொள்ளாதவர், எதைச் சொன்னாலும் திருத்தமாக, மென்மையாக, நாகரீகமாக சொல்லக் கூடியவர் என்கிறார்கள்.
தனது துறை உயர் அதிகாரிகளிடமும், பிறரிடமும் கூட மிகவும் நாகரீகமாக பேசுவாராம் ஓ.பன்னீர் செல்வம். யாரையும் ஒருமையில் பேச மாட்டாராம். ஜெயலலிதா மீது இவர் கொண்டுள்ள விசுவாசத்திற்கு நிகராக அதிமுகவில் யாரும் கிடையாது என்பது கட்சிக்காரர்களே வாசிக்கும் பாராட்டாகும்.
தனது தலைவருக்காக 2வது முறையாக முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதுவும் பெருத்த சந்தோஷத்துடன்.
முன்பு, 2001 செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா. இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக முதல்வர் பொறுப்பில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். அதன் பின்னர் 2002 மார்ச் மாதம் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போதும் முதல்வரானபோது மிகுந்த சோகத்துடன் பதவியேற்றார். விலகியபோது மிகுந்த சந்தோஷத்துடன் விலகினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதாவின் பதவி பறிபோனபோது யார் யார் பெயரோ முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வமே முதல்வரானார். இந்த முறை முதல்வராக அவர் பதவியேற்றபோது கண்ணீர் விட்டபடி பதவியேற்றார். அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமைச்சர்களும் அழுது கதறியவாறுதான் பதவியேற்றனர்.
இன்று அத்தனை பேரும் மகா சந்தோஷமாக பதவியேற்றுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் முகத்தில் ஆனந்தக் கூத்தாட, முதல்வர் பதவியிலிருந்து நேற்று விலகினார். பெருத்த நிம்மதி, சந்தோஷம், பூரிப்புடன் பதவி விலகிய அவர் இன்று 12 அமைச்சர்களோடு ஒருவராக முதல் பேட்ச்சில் இடம் பெற்று ஒரு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முதல் முறை முதல்வராக இருந்தபோது சட்டசபைக்கே போகவில்லை பன்னீர் செல்வம். 2வது முறை பதவியில் இருந்தபோதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அவர் அமரவில்லை. அதேபோல கோட்டையிலும் கூட அவர் ஜெயலலிதாவின் அறைப் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை. மேலும் சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.
யார் தன்னைப் பற்றி எவ்வளவு கேலி பேசினாலும், முகத்தில் மாறாத புன்னகையுடன் இந்த "கஷ்ட" காலத்தில் வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் பூரண விசுவாசியாக மேலும் ஒரு முறை தன்னை நிரூபித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications