ஓ.பி.எஸ். வாழ்க்கையில் எல்லாமே "வரலாறு"தான்!
முதல்வர் பதவியை 3வது முறையாக தியாகம் செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அந்த வகையில் அவர் வரலாறு படைத்து விட்டார்.
சென்னை: தியாகம் செய்வதற்காகவே இவரை அதிமுகவில் வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. தற்காலிக முதல்வராகவே காலம் பூராவும் கழித்த பெருமைக்குரியவர் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
ஜெயலலிதாவுக்காக 2 முறை தற்காலிக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இப்போது சசிகலாவுக்காகவும் ஒருமுறை தியாகியாகியுள்ளார். இவரை முழுமையான முதல்வராக தமிழகம் பார்க்கவே முடியாமல் போனது நல்ல நேரமா அல்லது கெட்ட நேரமா என்று தெரியவில்லை.
மொத்தம் 3 முறை முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம். ஒரு வருடம் கூட அப்பதவியில் நீடித்ததில்லை என்பது வரலாறாக மாறி விட்டது. தமிழகத்தில் அதிக முறை தற்காலிக முதல்வராக இருந்த பெருமைக்குரியவர் இவர் மட்டுமே.

முனிசிபாலிட்டி சேர்மன்
பெரியகுளம் நகராட்சித் தலைவராக முதல் பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். 1996ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவராக அவர் வெற்றி பெற்று பதவி வகித்தார். அப்பதவியில் மட்டுமே அவர் முழுமையாக பதவிக்காலத்தை முடித்துள்ளார். அதாவது 2001 வரை அப்பதவியில் நீடித்தார்.

2001 முதல் எம்.எல்.ஏ.
2001ம் ஆண்டு முதல் இவர் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். அதன் பின்னர் நிதி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்துள்ளார். அவை முன்னவராக இருந்துள்ளார்.

முதல் முறை முதல்வர் பதவியில்
கடந்த 2001ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தகுதி நீக்கமானதால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை முதல்வராக நீடித்தார் ஓ.பி.எஸ்.

மீண்டும் ஒரு தியாகம்
அடுத்து 2014ம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சிறைக்குப் போனதால், மீண்டும் முதல்வர் பதவி ஓ.பி.எஸ்ஸைத் தேடி வந்தது. பின்னர் ஜெயலலிதா அந்த வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு மே 22ம் தேதி ராஜினாமா செய்தார்.

ஜெயலலிதா இறந்ததும் 3வது முறையாக
அதன் பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததும் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மீண்டும் முதல்வர் பொறுப்புக்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து சசிகலாவுக்காக இறங்கி விட்டார்.
ஓ.பி.எஸ். வாழ்க்கையில் எல்லாமே வரலாறுதான்!












Click it and Unblock the Notifications