முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார்.. தினகரன் 'திடுக்'
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்ததாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்தார்.
அழிக்க நினைக்கிறார்
அதாவது பாஜகவும் பிரதமர் மோடியும் தான் அதிமுக பிளவுக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி மூலம்..
சசிகலாவை முதல்வராக்க முன்மொழிந்தவர் இதே ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். குருமூர்த்தி மூலம் பன்னீர்செல்வத்தை சசிலாகவுக்கு எதிராக பா.ஜ.க.தான் தூண்டிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சின்னம் எப்படி கிடைத்தது?
ஓ.பன்னீர்செல்வத்தின் படிப்படியான உயர்வுக்கு சசிகலா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு எப்படி கிடைத்தது என்று இப்போது புரிகிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.
மோடி அதிமுக பொது செயலாளரா?
பா.ஜ.க.வின் முதல் ஏஜெண்ட் பன்னீர்செல்வம், இரண்டாவது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பிரதமர் மோடியா என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மயுத்தத்தை தூண்டியது பாஜக
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார். அமைச்சர்களை சேர்த்து கொண்டால் மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பதவி கிடைக்காத விரக்தியில்
மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் குடும்பத்தினர் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.