வர்தா பாதிப்பு: மோடியுடன் நாளை ஓபிஎஸ் சந்திப்பு- தலைமைச் செயலகத்தில் மும்முர ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வர்தா புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என் கோரிக்கை வைக்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்தது. இந்த புயல் சென்னையை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து தடைபட்டது. மின்சார இணைப்பும், தொலைதொடர்பும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் கணித்தன.
இந்தநிலையில் தமிழகத்துக்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முதற்கட்டமாக அளிக்க வேண்டும் என்றும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை புயல் நிவாரணத்துக்காக விடுவித்தும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள வர்தா புயல் சேதம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தயாரித்து வருகிறது. இந்த அறிக்கையை டெல்லி சென்று பிரதமரிடம் கொடுப்பதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து உள்ளார்.
டெல்லி செல்ல உள்ளது தொடர்பாக ஞாயிறு கிழமையான இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ள மனு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications