ஜெயலலிதாவிற்கு மட்டுமே விசுவாசமான சேவகனாக இருந்தேன் - ஓபிஎஸ்
ஜெயலலிதாவிற்கு மட்டுமே தான் விசுவாசியாக இருந்தேன் என்றும் அதனால்தான் தன்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக கடைசிவரை இருந்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சசிகலா குடும்பத்திற்கு விசுவாசமாக இல்லாத காரணத்தினாலேயே தன்னை அரசியலை விட்டு அப்புறப்படுத்த நினைத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும், ஜெயலலிதாவின் மரணம்,இரட்டை இலை முடக்கம், டிடிவி தினகரன் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அரசியல் வாழ்க்கை
அரசியலில் தான் படிப்படியாக உயர்ந்தேன் என்றும் ஜெயலலிதாவினால் மட்டுமே முதல்வராக தேர்வு செய்யப்பட்டேன் என்றும் கூறிய ஓ.பன்னீர் செல்வம், தன்னை டிடிவி தினகரன் அரசியலுக்கு அழைத்து வரவில்லை என்று கூறினார்.

உண்மை விசுவாசி
நான் ஜெயலலிதாவிற்கு உண்மையான விசுவாசியாக இருந்தேன். அவர் எனக்கு அளித்த பணிகளை ஒரு உண்மையான சேவகனாகவே செயல்பட்டேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதன் காரணமாகவே தன்னை மீண்டும் முதல்வராக நியமனம் செய்தார் என்றும் தெரிவித்தார்.

அப்புறப்படுத்த நினைத்தனர்
ஜெயலலிதாவிற்கு மட்டுமே தான் விசுவாசமாக செயல்பட்டதால் தன்னை அரசியலை விட்டே அப்புறப்படுத்த நினைத்தனர் என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தனர் என்றும் தெரிவித்தனர். டிடிவி தினகரன் அதிகார போதையால் செயல்படுவதாக குற்றம் சாட்டிய ஓ.பன்னீர் செல்வம், குடும்ப அரசியலை கொண்டு வர முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

யாருடனும் கூட்டு இல்லை
திமுக, பாஜக என யாருடனும் கூட்டணி வைத்து செயல்படவில்லை என்றும் தெரிவித்தார். தாங்கள் தனித்து இயங்குவதாகவே தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், இடைத்தேர்தலில் அனைவரையும் எதிர்த்து போட்டியிடுவதாக கூறினார்.

நான் செய்த பாவமென்ன
குடும்ப அரசியல் வராது என்று டிடிவி தினகரன் கூறுவது பொய் என்றும், தான் செய்த பாவம் என்ன தன்னை சசிகலா குடும்பம் வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தது ஏன் என்றும் தெரிவித்தார். ஆர்.கே. நகரில் தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications