அதுதான் உங்கள் யூகம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள்.. அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ்
தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மோடியிடம் விவரித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
டெல்லி: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், தமிழக அரசியலில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பிரதமர் மோடியிடம் விளக்கியதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு சென்ற அவர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் எங்களுக்கு சுதந்திர தின விழா வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
அதன்பின்னர் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் தமிழக அரசியலில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக விளக்கினேன். விரைவில் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்போம் என்றார்.
தமிழக அரசியல் சூழல் என்றால் அதிமுக இணைப்பு குறித்தும் நீங்கள் பேசியதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதுதான் உங்கள் யூகம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மழுப்பலான பதிலையே தந்தார்.
அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி அணியினர் சாதகமாக பேசி வரும் நிலையில் மோடியிடம் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசியதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.