சசிகலா விளக்கம்.. தேர்தல் ஆணையத்திற்கு பதில் சொல்ல நாளை கடைசி நாள்... தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் சசிகலா அளித்துள்ள விளக்கம் குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு நாளை முடிவுக்கு வருவதால் ஓபிஎஸ் அணியினர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக சசிகலா அளித்த விளக்கத்துக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த டாக்டர் வா. மைத்ரேயன் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு நாளை பதில் அளிக்க உள்ளார். இதற்காக ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் வி.கே. சசிகலா அளித்துள்ள பதில் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த டாக்டர் வா. மைத்ரேயனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக வின் பொதுச்செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 7ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது.

ஓபிஎஸ் அணி புகார்
இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை, அக்கட்சியின் பொதுக் குழு தேர்வு செய்த நடைமுறை, கட்சி விதிகளுக்கு எதிரானது என்று டாக்டர் வா. மைத்ரேயன் தலைமையிலான 12 அதிமுக எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

தினகரன் பதில்
இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சசிகலா சார்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள்படி அதிமுகவில் தினகரனுக்கு எவ்வித பொறுப்பும்இ ல்லை என்பதால் அவரது பதிலை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது. மேலும், சசிகலா பதிலளிக்க மார்ச் 10 வரை அவகாசம் அளித்தது.

சசிகலா விளக்கம்
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு சசிகலா மார்ச் 10ஆம் தேதி பதில் அனுப்பினார். தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளுக்குரிய விளக்கத்தை அவர் 70 பக்கங்களில் அளித்திருந்தார். அதில், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த போதிலும் அவரால் 2012-இல் நீக்கப்பட்ட என்னை அடுத்த சில மாதங்களிலேயே கட்சித் தலைமை மீண்டும் சேர்த்துக் கொண்டது.

குற்றச்சாட்டு
அந்த வகையில் அந்த நீக்கல் நடவடிக்கை ரத்தாகி விட்டது. இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று மனுதாரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. கட்சியின் பொதுக் குழுவில் எனது பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிந்து கையெழுத்திட்ட பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர்தான் தற்போது எதிராகக் குற்றம்சாட்டுகின்றனர் என்பன உள்ளிட்ட விளக்கத்தை சசிகலா அளித்திருந்தார்.

ஓபிஎஸ் அணிக்கு நோட்டீஸ்
இந்நிலையில், நடைமுறை மரபுகளின்படி சசிகலா அளித்த விளக்கத்துக்கு புகார்தாரர் என்ற முறையில் கருத்து தெரிவிக்குமாறு டாக்டர் வா. மைத்ரேயனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய்க்கிழமைக்குள் பதில் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை
தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் தர நாளை கடைசி நாள் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திற்கு விரிவான விளக்கத்தை தர உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications