அதிமுக எம்எல்ஏக்கள் உங்களோடு வருவார்களா? பொறுத்தார் பூமி ஆள்வார்... ஓபிஎஸ் நம்பிக்கை
ஓபிஎஸ் அணிக்கு மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் வர வாய்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொறுத்தார் பூமி ஆள்வார் என்று நம்பிக்கையோடு பதில் அளித்தார் ஓபிஎஸ்.
சென்னை: ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் அவரது பிறந்த நாளான இன்று ஓபிஎஸ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஓபிஎஸ். அப்போது, தங்கள் அணிதான் உண்மையான அதிமுக என்று கூறியிருக்கும் உங்கள் அணிக்கு சசிகலா அணியில் இருந்து எம்எல்ஏக்கள் வர வாய்பிருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்று ஓபிஎஸ் நம்பிக்கையோடு பதில் அளித்தார். அவர் இந்த பதிலை சொல்லி முடிப்பதற்குள், அவரது ஆதரவாளர் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் குறித்த கேள்விக்கு, அவர் தனது மனத்தில் உள்ள கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் என்று பட்டென பதில் அளித்த ஓபிஎஸ், திமுக சட்டசபையில் நடந்து கொண்டது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார்.
முன்னதாக, ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை ஓபிஎஸ் வழங்கினார். இதற்காக கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் நேற்று மனு ஒன்றும் ஓபிஎஸ் அணி சார்பாக அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.