காணாம போய்ருவீங்க ஓ.பி.எஸ்.. நாஞ்சில் சம்பத் சாபம்!
எம்எல்ஏக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பாதுகாப்பாக தங்கியுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் இருந்து காணாமல் போவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அரசியல் இருந்து காணாமல் போவார் என்றும், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போவார்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் திடீரென ஓபிஎஸ் ஆதரவு நிலையை எடுத்தார். இதனையடுத்து அவரை கட்சியின் அவைத்தலைவர், மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார் சசிகலா.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மதுசூதனன் தனி ஆளாகத்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் சென்றுள்ளார். அவருடன் வேறு யாரும் செல்லவில்லை என்றார்.
தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் சில அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனவே எம்எல்ஏக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும் விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஒ.பன்னீர் செல்வம், கட்சிக்கு துரோகம் செய்து விட்டு சென்றுள்ளார். அவரை நம்பி போனவர்கள் காலாவதியானவர்கள். ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் இருந்தே காணாமல் போவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.