ஜெகஜோதியாய் தயாராகி வரும் அம்மா மாளிகை!... பொங்கலுக்கு 1000 பேர் குடிபோறாங்க!!
சென்னை: சென்னை மாநகராட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடமான ‘அம்மா மாளிகை' கட்டுமான பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதன் திறப்பு விழா, ஜனவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிய மாளிகைக்கு இடம்மாறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், ரிப்பன் மாளிகையில் இயங்கி வருகிறது. ரிப்பன் மாளிகையில், மேயர், கமிஷனர், இணை, துணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்கினாலும், துறை அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அனைத்து அலுவலகங்களையும், ஒரே கட்டடத்தில் செயல்படுத்தும் வகையில், ரிப்பன் மாளிகைக்கு பின்புறம், ஒரு இணைப்பு கட்டடம் கட்டப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும், கட்டட பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 28 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சத்து 28 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள கட்டடத்திற்கு, மேயர் சைதை துரைசாமி, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், ‘அம்மா மாளிகை' என, பெயர் சூட்டினார்.
மேயர், கமிஷனர், இணை கமிஷனர் அலுவலகங்கள் தவிர மற்ற துறைகள் அனைத்தும் புதிய கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்படுகின்றன. கழிவு நீர், மழை நீர், கட்டிடங்கள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கள் உள்ளிட்ட பல துறைகள் விரைவில் மாறுகின்றன. புதிய கட்டிடத்தில் 500 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் மற்றும் 100 பேர் அமரக் கூடிய கூட்டரங்கம் போன்றவை இடம் பெறுகின்றன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் புதிய அம்மா மாளிகையில் விரைவில் பணியாற்ற உள்ளனர்.
பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்கல் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. அந்த பணிகளையும் விரைந்து முடித்து ஜனவரி 15ஆம்தேதி அன்று புதிய கட்டிடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்திற்கு அனைத்து துறைகளும் வந்ததும் பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும். புதிய கட்டிட வளாகத்தில் கூடுதலாக 50 கார்கள், 150 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.28 கோடி செலவில் முழுவதும் குளு குளு ஏ.சி. வசதியுடன் அலுவலகங்கள் செயல்பட உள்ளன.












Click it and Unblock the Notifications