நெல்லை, தூத்துக்குடியில் கைக் குழந்தைகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத குவிந்த பெண்கள்!
திருநெல்வேலி: குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொறியியல் பட்டதாரிகள் பலர் இந்த தேர்வை ஆர்வத்துடன் எதிர்கொண்டனர். ஏராளமான பெண்கள் கை குழந்தைகளுடன் இந்த தேர்வை எழுத வந்திருந்தனர். தேர்வு கூடத்திற்குள் கால்குலெட்டர், செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 69ஆயிரத்து 794 பேர் விண்ணப்பிருந்தனர்.
இவர்களில் 58 ஆயிரத்து 821 பேர் தேர்வை எதிர்கொண்டனர். 10 ஆயிரத்து 973 பேர் தேர்வுக்கு வரவில்லை.
நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, சிவகிரி, வள்ளியூர், விகேபுதூர் ஆகிய 12 இடங்களில் 228 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. மாற்று திறனாளிகள் பலரை சம்பந்தப்பட்ட ஊரில் இருந்து பல மைல்கள் தள்ளி
உள்ள மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் வேதனையுடன் சென்று தேர்வை எதிர்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய 8 தாலுகாவில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. இதில் பங்கேற்க 38816 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 31879 பேர் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 6937 பேர் .தேர்வு எழுத வரவில்லை. இரு மாவட்டங்களிலும் சேர்ந்து 17910 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.