பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
நெல்லை அருகே பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நெல்லை: ஏர்வாடியில் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடை கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளக்குகள் அதிக வெளிச்சம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
மருத்துவமனையில் அனுமதி
விழா முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் கண் எரிச்சல் அதிகமானமானதால், இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உரிய சிகிச்சை
அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் சந்திப்பு
மின் விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததார்.
வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில், கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.