இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கட்டிக்கட்டியாக 30 கிலோ தங்கம் கடத்தல்.. 6 பேர் கைது!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 30 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்கம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிடம், தனுஷ்கோடி மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதிகளில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாயல்குடி பகுதியில் கார் ஒன்றில் இருந்து 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கார் ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஓட்டுநரை கைது செய்த போலீஸார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் கோவைக்கு 14 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 14 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். இதேபோல், உச்சிப்புளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பால் என்பவரிடம் இருந்து 4 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாம்பன் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ், ஹக்கீம் ஆகியவர்களிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் வேறு எங்காவது தங்கம் கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 30 கிலோ 400 கிராம் தங்கமும், 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications