தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு.. ப.சி.யை ஓரம் கட்டிய காங். மேலிடம்- ஆதரவாளர்கள் 'ஷாக்'
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் ப.சிதம்பரம் கோஷ்டி முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில் 25 தொகுதிகள் என்பதில் கறாராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திமுகவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழு அறிவிக்கப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் இன்று 8 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கோபிநாத், தங்கபாலு, யசோதா, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தனர், சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் ப.சிதம்பரமோ அவரது கோஷ்டியினரோ யாருமே இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்துக்கு மேலிடம் தரும் மரியாதை இதுதானா? என்ற குமுறை அவரது ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் கடிதங்களையும் தட்டிவிட்டுள்ளனர்.
இதனால் தற்போதைய தொகுதி பங்கீட்டு குழு மீண்டும் ஒரு முறை மாற்றி அமைக்கலாம் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications